தெலுங்கானாவில் சுதந்திர தினவிழாவுக்காக கொடிக்கம்பம் நட்டபோது மின்சார
கம்பி அறுந்து விழுந்தது. இதிலிருந்து 4 மாணவிகளை காப்பாற்றிய தலைமை
ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மேடிகொண்டா கிராமத்தில் தொடக்க
பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை பள்ளியில்
நடைபெற்றது. இதற்கான பொறுப்புகளை தலைமை ஆசிரியை பிரபாவதி கவனித்து வந்தார்.
அப்போது தேசிய கொடி கம்பம் பள்ளியில் நடப்பட்டது. இதனை அங்கிருந்த பள்ளி
மாணவிகள் 4 பேர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்
பாராதவிதமாக கொடி கம்பம் மேலே சென்ற மின் கம்பியில் சிக்கியுள்ளது. இதனால்,
அந்த மின் கம்பி அறுந்து மாணவிகள் மீது விழும் வகையில் வந்தது. இதை
பார்த்த தலைமை ஆசிரியை பிரபாவதி பதற்றத்துடன் ஓடிவந்து 4 மாணவிகளையும்
காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
இதனால், மின்கம்பி ஆசிரியை மீது விழுந்தது. இதில் தலைமை ஆசிரியர் பிரபாவதி
மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்,
மின்சாரம் தாக்கியதில் மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகளை
காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தை
சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Post a Comment